இனிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்து தொடரையும் சமநிலைப்படுத்தியுள்ளது.
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
முதல் போட்டி வெற்றி - தோல்வி இன்றி முடிவடைந்த நிலையில் 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1 : 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லீட்சில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.முதலாவது இனிங்சுக்காக இந்தியா-78 ஓட்டங்களையும், இங்கிலாந்து 432 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.
பின்னர் 2வது இனிங்சுக்காக விளையாடிய இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
139 ஓட்டங்களை எடுத்தால் இனிங்ஸ் தோல்வியை தவிர்க்கலாம் என்ற நிலையில் கைவசம் 8 விக்கெட்டுக்களுடன் இந்திய அணி நேற்றைய 4வது நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
ஆட்டத்தின் 3வது பந்தில் மேலதிக ஓட்டமெதனையும் பெறாது புஜாரா 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
விராட் கோலியும் 55 ஓட்டங்களுடன் ஆட்மிழந்து வெளியேறினார்.
இங்கிலாந்து அணி வீரர்களது சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்மிழந்து வெளியேறினர்.
இறுதியில் மேலதிகமாக 63 ஓட்டங்களை பெற்று 278 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இனிங்ஸ் தோல்வியை சந்தித்தது இந்திய அணி.
பந்துவீச்சில் ஒல்லி ரொபின்சன் - 5, ஓவர்ரொன் - 3, ஆண்டர்சன் மற்றும் ரூட் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
இதன் மூலம் இனிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்கள் என்ற சிறப்பான வெற்றியை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.
இவ் வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1 : 1 என சமன் செய்துள்ளது இங்கிலாந்து அணி.
போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஒல்லி ரொபின்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா